• ஹாய் மக்களே! நம் Nectar Novels தளத்திற்கு நல்வரவு🙏😍😍 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள் nectarnovels.ss@gmail.com 🩷 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...👇 வேதா விஷால் & அனன்யா🙏💖

அத்தியாயம் - 1

siteadmin

Administrator
Staff member
Feb 3, 2026
47
5
8
chennai
முன்னுரை

ஆன்மிகம் பற்றி எழுதுவது எனக்கு மிகவும் பிடித்தமான விஷயம். அதற்கான வாய்ப்பை அளித்த சுதா மற்றும் சுதாவிற்கு என்னுடைய அன்பு கலந்த நன்றி.

ஆன்மிகம் பற்றி எழுதத் தொடங்கும்போது பெண்களைப் போற்றும் பண்டிகையான நவராத்திரி பற்றி முதலில் எழுதலாமே என்று தோன்றியது. நவராத்திரி பற்றி எனக்குத் தெரிந்த தகவல்களை எளிமையான நடையில் உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

தொடர்ந்து ஆன்மிகம் பேசிக்கொண்டே பயணிப்போம்.

புதிய தளம் ஆரம்பித்துள்ள அன்புத் தோழிகள் சுதா திருமலை மற்றும் வேதா விஷால் ( சுதா சுரேந்திரன்) இருவருக்கும் என்னுடைய வாழ்த்துகளும் ஆசிகளும்.

புவனா சந்திரசேகரன்.


ஆதி பராசக்தி - 1
நவராத்திரி என்பதே பெண்களைக் கொண்டாடும் பண்டிகை. பெண்களைப் போற்றும் பண்டிகை. ஆண், பெண் இரண்டு பேரில் உயர்ந்தவர் யார் என்று விவாதம் செய்வது தேவையில்லாத வேலை. சக்தியும், சிவமும் சேர்ந்துதான் உலகை வழி நடத்துகிறார்கள். பிரபஞ்சத்தின் தலைவன் இறைவன் என்றால் தலைவி என்று ஓர் இறைவி இருக்கத்தான் வேண்டும்.



பெண் என்பவள் தாயாக, சகோதரியாக, தோழியாக, மகளாக என்று பல்வேறு அவதாரங்களை எடுத்து ஆணுக்கு உதவுகிறாள். உதவுகிறாள் என்று சொன்னால் அங்கே ஆணுக்குத் தானே முதன்மை இடம் என்று எண்ணக் கூடாது. இப்படித் தவறான கருத்துகளை மனித இனம் மனதில் வளர்த்துக் கொண்டு விடக் கூடாது என்கிற எண்ணத்துடன் தான் நம்முடைய புராணங்கள், இதிகாசங்கள், காவியங்கள் என்று அனைத்திலும் பெண்களின் சாதனைகளையும், பெருமைகளையும் கதைகளின் ஊடே எடுத்துச் சொன்னார்கள்.



நவராத்திரிப் பண்டிகையும் இந்த நோக்கத்துடன் தான் கொண்டாடத் தொடங்கியிருப்பார்கள் என்று நினைக்கிறேன்.



நவராத்திரிப் பண்டிகை

பெண்மையின் பெருமை பேசும்

பேரன்புத் திருவிழா!



கலைகளை அள்ளித் தரும்

கலைமகள் அருளும்

வளமையை அள்ளித் தரும்

அலைமகள் அருளும்

வீரத்தை அளிக்கும்

மலைமகள் அருளும் சேர்ந்து

மாநிலத்தில் என்றும்

மகிழ்ச்சியே பரப்பட்டும்!



நவரசங்கள் நவரத்தினங்கள்

நவதானியங்கள் என்று

நானிலத்தில் நாம் போற்ற

நவராத்திரி வழிபாடும்

நம்மை நல்வழி நடத்திடும்!



அமைதித் திருவுருவம் அவளே!

அன்னை சாரதா வடிவில்!

பொன்னும் பொருளும்

அள்ளித் தந்திடும் தேவி அவளே!

துணிவும் வீரமும் பெருக்கி

தீயவை அழிக்கும் தேவி அவளே!



பெண்ணென்ற தெய்வத்தைப்

போற்றிப் பாராட்டிப் பூவுலகில்

மட்டற்ற இன்பமும் செழுமையும்

மாநிலத்தில் சிறக்கட்டும்!



நவராத்திரியில் கொண்டாடப்படும் ஒன்பது பெண்தெய்வங்கள் யார் என்று பார்க்கலாம்.



  1. சைலபுத்ரி: இமயமலையின் தெய்வம், தூய்மை மற்றும் வலிமையைக் குறிக்கிறது.
  2. நாள் 2 - பிரம்மச்சாரிணி: தவம் மற்றும் தவத்தின் தெய்வம், அமைதி மற்றும் ஞானத்தைக் குறிக்கிறது.
  3. நாள் 3 - சந்திரகாந்தா: தைரியத்திற்கு பெயர் பெற்ற இந்த வடிவம், பாதுகாப்பு மற்றும் அமைதிக்காக வழிபடப்படுகிறது.
  4. நாள் 4 - கூஷ்மாண்டா: பிரபஞ்சத்தின் படைப்பு சக்தி, ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் தருகிறது.
  5. நாள் 5 - ஸ்கந்தமாதா: தாய்மை மற்றும் ஊட்டச்சத்தின் தெய்வம், ஞானம் மற்றும் கருவுறுதலுடன் தொடர்புடையது.
  6. நாள் 6 - காத்யாயனி: துணிச்சலையும் அச்சமின்மையையும் குறிக்கும் ஒரு கடுமையான போர்வீர தெய்வம்.
  7. நாள் 7 - காளராத்திரி: துர்க்கையின் மிகவும் உக்கிரமான வடிவம், தீய சக்திகளின் அழிவைக் குறிக்கிறது.
  8. நாள் 8 - மகாகௌரி: மன்னிப்பு மற்றும் அமைதியின் தெய்வம், தூய்மை மற்றும் அமைதியைக் குறிக்கிறது.
  9. நாள் 9 - சித்திதாத்ரி: இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளின் தெய்வம், ஒன்பது நாட்கள் ஆன்மீக வழிபாட்டை நிறைவு செய்கிறாள்.
நவராத்திரியின் போது செய்யப்படும் பிரார்த்தனை, மந்திரம் மற்றும் தியானம் நம்மை நம் ஆன்மாவுடன் இணைக்கிறது. ஆன்மாவுடன் தொடர்பு கொள்வது நமக்குள் நேர்மறையான குணங்களைத் தூண்டி, சோம்பல், பெருமை, வெறி, ஏக்கங்கள் மற்றும் வெறுப்புகளை அழிக்கிறது. எதிர்மறை உணர்ச்சிகளின் வடிவத்தில் மன அழுத்தம் அழிக்கப்படும்போது, மாற்றமடையும் ஒன்பது இரவுகளின் ஆழ்ந்த ஓய்வை நாம் அனுபவிக்கிறோம்.

இந்த மனித உடலமைப்பையும், இது எவ்வாறு பூமி, சூரியன், சந்திரன் மற்றும் தெய்வீகத்தின் பல்வேறு அம்சங்களோடு தொடர்பில் இருக்கிறது என்பதையும் ஆழமாக கவனித்து, அதில் இந்த கலாச்சாரம் தனது வேரை ஊன்றியிருக்கிறது. நமது திருவிழாக்களை நாம் எப்போது, எப்படி கொண்டாடுகிறோம் என்பதிலும் இது பிரதிபலிக்கிறது.

நவராத்திரி என்றால் "ஒன்பது இரவுகள்" என்று பொருள். அமாவாசையை அடுத்து வரும் ஒன்பது நாட்கள் நவராத்திரி எனப்படுகிறது. சந்திரச் சுழற்சியின் முதல் ஒன்பது நாட்கள் பெண் தன்மையுடையவைகளாகக் கருதப்படுகின்றன. தெய்வீகத்தின் பெண் தன்மையாகக் கருதப்படும் தேவிக்கு, இது மிகச் சிறப்பான நேரம். ஒன்பதாவது நாள் நவமி என்று வழங்கப்படுகிறது. பௌர்ணமியை ஒட்டிய ஒன்றரை நாட்கள் சமநிலையான காலம். மீதமுள்ள 18 நாட்கள் இயற்கையிலேயே ஆண் தன்மையானதாக இருக்கிறது. மாதத்தின் பெண்மை மிளிரும் காலம் தேவியைப் பற்றியதாக இருக்கிறது. எனவேதான் இந்த கலாச்சாரத்தில், நவமி வரையிலான அனைத்து வழிபாடுகளும் தேவிக்கு அர்ப்பணிக்கப்படுகின்றன.

ஒரு வருடத்தில், பன்னிரண்டு முறை இந்த ஒன்பது நாள் காலகட்டம் இருக்கிறது.‌ இதில் ஒவ்வொன்றும் தெய்வீகப் பெண்தன்மையின் அல்லது தேவியின் வெவ்வேறு அம்சங்களைக் குறித்ததாக அமைக்கப்பட்டுள்ளது. அக்டோபரை ஒட்டி, புரட்டாசி மாதத்தில் வரும் நவராத்திரி குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது, ஏனென்றால் இது கற்றலின்‌ தெய்வமான சாரதாவுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மனிதனால் பல செயல்களைச் செய்யமுடியும் என்றாலும், இந்த கலாச்சாரத்தில் கற்றலுக்கு மிகுந்த முக்கியத்துவம் வழங்கப்படுகிறது. மற்ற உயிரினங்களால் நம்மைவிட வேகமாக ஓடமுடியும்; நம்மைவிட வலிமையானவையாக அவை இருக்கின்றன; நம்மால் முடியாத பலவற்றையும் அவை செய்கின்றன - ஆனால், நம்மால் கற்க முடிந்த அளவுக்கு அவற்றால் கற்றுக்கொள்ள முடியாது. மனிதனாக இருப்பதன் பெருமையே உங்களுக்கு விருப்பம் இருந்தால் நீங்கள் எதை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ள முடியும் என்பதுதான்.

முதல் மூன்று நாட்கள் துர்க்கைக்கும், அடுத்த மூன்று நாட்கள் லட்சுமிக்கும், கடைசி மூன்று நாட்கள் சரஸ்வதிக்கும் அர்ப்பணிக்கப்பட்டுள்ளன. பத்தாவது நாளான விஜயதசமி, வாழ்க்கையின் இந்த மூன்று அம்சங்கள் மீதும் வெற்றியடைவதை குறிக்கிறது.

வலிமை அல்லது அதிகாரத்தை விரும்புபவர்கள், தாயாக திகழும் பூமி தேவி, துர்க்கை அல்லது காளி ரூபங்களை வணங்குகிறார்கள். செல்வவளம் அல்லது பொருள்தன்மையான பரிசுகளை அடையும் ஆசை, வேட்கை உள்ளவர்கள் லட்சுமி அல்லது சூரியனை வணங்குகிறார்கள். அறிவாற்றலை வேண்டுபவர்களும், நிலையற்ற இந்த உடலின் எல்லைகளை கடந்து செல்ல விரும்புபவர்கள் அல்லது கரைந்துபோக விரும்புபவர்கள் சரஸ்வதி அல்லது சந்திரனை வணங்குகிறார்கள்.

மனிதர்களின் பிழைப்பிற்கும், நல்வாழ்வுக்கும் தேவியின் முதல் இரண்டு பரிமாணங்கள் தேவை. இவை எல்லாவற்றையும் கடந்து செல்வதற்கான ஆர்வம் மூன்றாவது பரிமாணம். சரஸ்வதியை நீங்கள் உங்களிடம் அழைக்க வேண்டுமென்றால், உங்களிடம் விடாமுயற்சி இருக்க வேண்டும். இல்லையென்றால் உங்களால் சரஸ்வதியை அணுகமுடியாது.



தொடர்ந்து பேசுவோம்.



புவனா சந்திரசேகரன்.
 

Author: siteadmin
Article Title: அத்தியாயம் - 1
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.