• வணக்கம் மக்களே, கதைத்தறி தளத்திற்கு நல்வரவு🙏😍😍 வாசகர்களின் வழக்கமான ஆதரவை எதிர்நோக்கி...🙏 எங்களுடன் தளத்தில் இணைய விரும்பும் எழுத்தாளர்கள், பிற படைப்பாளர்கள் கீழ்க்கண்ட👇 மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளுங்கள். kadhaithari@gmail.com கதையும் நேசமும் நெய்வோம்🩷 வேதா விஷால் and அனன்யா

கண்ணில் விழுந்த தூசும்! வாயில் போட்ட காசும்!

SudhaSri

Administrator
Staff member
Joined
Jun 16, 2024
Messages
366
கண்ணில் விழுந்த தூசும்! வாயில் போட்ட காசும்!


எப்பொழுதாவது உங்கள் காதுக்குள் ஏதாவது ‌பூச்சி புகுந்திருக்கிறதா? கண்களில் தூசி விழுந்திருக்கிறதா? உங்கள் வீட்டிலோ, அருகிலோ ஒரு குழந்தை காசைத் தெரியாமல் விழுங்கியிருக்கிறதா?

இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் என்ன செய்தீர்கள்? அந்த அயல் பொருட்களை (foreign body) வெளியே எடுப்பதற்கு நீங்கள் செய்த முதல் முயற்சி என்ன? பலருக்கு உணவு சாப்பிடும்போது தொண்டையில் மீன் முள் மாட்டிக் கொண்டிருக்கும். உடனே பெரியவர்கள் என்ன சொல்வார்கள்? 'வெறும் சாதத்தை ஒரு கவளம் எடுத்து அப்படியே விழுங்கினா முள் உள்ள போயிடும்' என்று சொல்லியிருப்பார்கள். பலமுறை அது சரியாகவும் இருந்திருக்கும்.

சில சமயம் நாணயங்களை விழுங்கிவிட்ட குழந்தைகளுக்கு இரண்டு மூன்று நாட்களுக்குள்ளாகவே அவை மலத்துடன் கலந்து வெளியேறி விடலாம். லேசாக மேற்புறத்தில் கண்ணில்பட்ட தூசுகளை ஒரு தட்டில் நீரை வைத்துக்கொண்டு அதனுள் விழித்தாலோ அல்லது சிறிய கைக்குட்டையாலோ யாராவது ஒரு பெரியவர் அகற்ற உதவி செய்திருப்பார். இத்தகைய மென்மையான செய்கைகளில் தவறில்லை. அதன் மூலம் அந்தத் தூசினை அகற்ற முடிந்துவிட்டால் நல்லது.

எல்லா நேரமும் இப்படிப்பட்ட செயல்கள் பயன் தருவதில்லை. சமீபமாக இளைஞர் ஒருவர் இருசக்கர வண்டியில் பயணிக்கும்போது காதிற்குள் பெரிய பூச்சி நுழைந்துவிட்டது. முதலில் அவரே பட்ஸ் மூலமாகக் குடைந்து பார்த்திருக்கிறார். அதன்பின் நண்பன் ஒருவர் சேஃப்டி பின்னால் எடுக்க முயன்றிருக்கிறார். முடியாமல் போகவே அருகிலிருந்த சிறு மருத்துவமனைக்குச் சென்றிருக்கிறார் இளைஞர். அவர்களும் முயன்று பார்க்க, முடியாமல் அவசர சிகிச்சை பிரிவுக்கு வந்தார்.

உள்ளே சென்றிருந்தது பெரிய பூச்சி. இத்தனை பேரின் முயற்சியால் அது துண்டுதுண்டாக ஆகியிருந்தது. கிட்டத்தட்ட இருபது நிமிடம் செலவழித்து துண்டாடப்பட்டிருந்த அந்தப் பூச்சியின் உடலை பல தவணைகளாக வெளியே எடுத்து முடித்தோம்.

சமீபத்தில் டிவி ரிமோட்டிற்கு பயன்படுத்தும் சிறிய வகை பேட்டரியை விழுங்கி விட்டது ஒரு குழந்தை. பேட்டரிகளில் கெமிக்கல்கள் கலந்திருக்கிறது என்பதால் அவை வயிற்றின் அமிலத்துடன் கலந்து ஏதாவது ரசாயன விளைவை ஏற்படுத்தக் கூடும் என்ற பயத்தில் அண்டை மாவட்டத்தின் மிகப்பெரிய மருத்துவமனையில் மூன்று நாட்களுக்கு அந்தக் குழந்தை தொடர் கண்காணிப்பில் வைக்கப்பட்டிருந்தது. மூன்று நாட்கள் கழித்து எந்தவித சேதமும் இல்லாமல் பேட்டரி வெளியே வரும்வரை பெற்றோர்களுக்கு உறக்கமில்லை.

பொதுவாக இப்படி அயல் பொருட்களால் அதிகம் பாதிக்கப்படுபவர்கள் குழந்தைகளே. பல சமயம் நாணயங்களே அதற்கான காரணிகளாக இருக்கின்றன. ஒரு குழந்தை நாணயத்தை விழுங்குகிறது என்று எடுத்துக்கொண்டால் 99% அது தானாகவே வெளியே வந்து விட வாய்ப்புண்டு. மீதி உள்ள ஒரு சதவீதம் குழந்தைகளில் அந்த நாணயம் குறிப்பிட்ட இடங்களில் சிக்கிக்கொள்ள வாய்ப்பு இருக்கிறது. ஒன்று வாய்க்கும் பின்பகுதியில் மூச்சுக் குழாய்க்கு சற்று மேலே.. Cricopharynx என்ற இந்தப் பகுதியில் சிக்கிக்கொண்டால் மூச்சுத் திணறல் ஏற்படும். சிறு குழந்தைகள் என்றால் தலைகீழாகப் பிடித்துக்கொண்டு முதுகில் பலமாக ஒரு தட்டு தட்டுவார்கள். அப்போது அத்தகைய அயல் பொருள் எளிதில் வெளிவந்துவிடும். Nasopharynx பகுதியில் சிக்கியிருக்கும் அயல் பொருளை உடனடியாக மயக்க மருந்து கொடுத்து எண்டோஸ்கோபி மூலம் அகற்ற வேண்டும். இல்லையேல் உயிரிழப்பு உறுதி.

அதற்கு அடுத்தபடியாக வயிற்றுக்கும் குடலுக்கும் நடுவிலிருக்கும் வால்வு போன்ற பகுதி. மூன்றாவதாக சிறுகுடலும் பெருங்குடலும் இணையும் பகுதி. இந்தப் பகுதிகள் ஏனைய பகுதிகளை விட குறுகலாக இருப்பதால் இவற்றில் நாணயங்கள் குறுக்கு வாக்கில் சிக்கிக்கொண்டால் அறுவை சிகிச்சையோ என்டோஸ்கோபியோ பயன்படுத்தி தான் அவற்றை வெளியே எடுக்க முடியும். உணவுக்குழாய் வழியே சென்றிருந்தால் தொடர்ந்து இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை எக்ஸ் ரே படம் எடுத்துப் பார்த்தால் நாணயம் எந்தப் பகுதியில் இருக்கிறது என்பதைக் கண்டுபிடித்து விடலாம். சில அயல் பொருட்கள் மட்டுமே எக்ஸ்ரேயில் கண்டுபிடித்த கூடியவை. (Radio opaque foreign body). வேறு சில பொருட்களை எக்ஸ்ரே மூலம் கண்டுபிடிக்க முடியாது (radio lucent foreign body).

கடலை, விதைகள் போன்ற பொருட்கள் (vegetative foreign body) மூக்கின் அருகில் கொண்டு செல்லும்போது உள்ளுக்குள் மாட்டிக் கொண்டிருக்கும். உள்ளே சென்ற அன்று எந்த அறிகுறியும் இருந்திருக்காது நாளாக நாளாக உடலினுள் இருக்கும் ஈரப்பதத்தை உறிஞ்சி அந்த விதை பெரிதாகும் போது சுவாசக் குழாயை அடைத்து கொள்ள வாய்ப்பு உண்டு. இதனால் குழந்தைக்கு திடீர் மூச்சுத்திணறல் ஏற்படலாம். இதுவரை இளைப்பு, மூச்சுத்திணறல் பிரச்சனை இல்லாத குழந்தைக்கு திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்படுகிறது என்றால் இப்படி அயல் பொருட்கள் உள்ளே போயிருக்க வாய்ப்பு அதிகம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

சிறுவயது, விவரம் அறியாத குழந்தைகளை கண் கொத்திப் பாம்பாக கவனித்து கொண்டே இருக்க வேண்டியது மிகவும் அவசியம். ஒன்பது மாதங்கள் நிறைவடைந்த குழந்தை அப்போது தான் நன்றாகத் தவழத் துவங்கியிருக்கும். நிற்கும் நமது கண்களுக்கு தென்படாத சிறிய பொருட்கள், தவழும் குழந்தையின் கண்களுக்குத் தென்பட்டுவிடும். இதே காலகட்டத்தில் தான் பின்சர் கிராஸ்ப் (pincer grasp) என்ற, பெருவிரல் மற்றும் ஆட்காட்டி விரலால் பொருட்களை அழகாகப் பிடித்துக்கொள்ளும் தன்மையும் வளர்வதால் குழந்தைக்கு இயல்பாகவே சிறு பொருட்களைப் பொறுக்கி விடும் உந்துதல் ஏற்படுகிறது. இதே காலகட்டத்தில் தான் கைக்கும் வாய்க்குமான ஒருங்கிணைப்பும் (hand mouth reflex) வளரத் தொடங்கியிருக்கும் ஏன்பதால் குழந்தை தானாகவே தட்டில் இருந்த உணவுகளை எடுத்து வாயில் போட்டுக் கொள்ளவும் பழகுகிறது. அதனால் கீழே கிடைக்கும் பொட்டுக்கடலை, பாசி மணிகள், நாணயங்கள், கசக்கி வீசப்பட்ட சிறிய தாள்கள் இவற்றை எடுத்துக் குழந்தை வாயில் போட்டுக்கொள்ள கூடும்.

ஒரு குறிப்பிட்ட மனநிலை பிரச்சனையில் தலைமுடியைத் தொடர்ச்சியாக தானே பிய்த்துக் கொள்ளும் பழக்கம் ஏற்படுவதுண்டு. (Trichotillomania). அத்தகைய சிறுவர்களை இளைஞர்களை நீங்கள் பார்த்திருக்கலாம். அவர்களது தலையில் ஒரு பகுதி மட்டும் வட்டமாக முடி இன்றி காணப்படும். எப்போது பார்த்தாலும் தலைமுடியை பிடித்துக் கொண்டே இருப்பார். பெரும்பாலானவர்கள் அப்படி பிய்க்கும் தலைமுடிகளை வாய்க்குள் போட்டு விழுங்கி விடுவதும் உண்டு. ஒன்றிரண்டு தலைமுடிகள் தெரியாமல் நமது உணவில் கலந்திருந்தால் அவை எளிதில் வெளியேறிவிடும். ஆனால் மாதக்கணக்காக, வருடக்கணக்காக விழுங்கிக் கொண்டே இருக்கும் போது தலைமுடிகள் ஒரு பந்தாக மாறிக் குடலின் ஒரு பகுதியில் போய்த் தங்கி அடைத்துக் கொள்வதும் உண்டு. (Trichobezoar) அதை அறுவை சிகிச்சை மூலம் அகற்ற வேண்டியது அவசியம்.

அதே போல் கண்களில் விழும் தூசிகளை, அது உருவாக்கும் தீவிர உறுத்தலால் எப்பாடுபட்டாவது அகற்றி விட முயல்வோம். கண்ணில் தூசி விழுந்து விட்டால் வாகனத்தை ஓரமாக நிறுத்தி கண்ணைத் தொடர்ந்து இமைத்தாலே பெரும்பாலான தூசிகள் கண்ணீரில் கலந்து வெளியேறிவிடும். ஆனால் அனிச்சை செயலாக தூசி விழுந்த உடன் நாம் கையைக் கொண்டு உடனடியாக அதை கசக்கி விடுவோம். அப்படி செய்யும் போது இமையின் உட்புறத்திலோ அல்லது கருவிழியின் மேற்புறத்திலோ தூசி ஒட்டிக் கொள்ள வாய்ப்பு அதிகம். வெல்டிங், தச்சு வேலை போன்ற தொழில்களிலும் மிகச் சிறிய அயல் பொருட்கள்ன கண்ணில் தங்கி விடுவதுண்டு. இவற்றையும் மருத்துவர் உதவி கொண்டே அகற்றிட வேண்டும். எருக்கம்பால் விடுவது, தாய்ப்பாலை ஊற்றுவது, கடையில் ஏதோ ஒரு சொட்டு மருந்தை வாங்கிப் பயன்படுத்துவது இப்படிப்பட்ட செய்கைகளால் அதிகளவில் கண் பார்வையை இழந்தவர்கள் மிக அதிகம்

உடலுக்கு உள்ளே சென்றுவிட்ட பொருட்களைப் போலவே வெளியிலிருந்து உடலை துளைக்கும் முள், கல், பீங்கான் கண்ணாடி போன்ற பொருட்களை வெளியே எடுப்பதிலும் நம் மக்களிடையே அலட்சியமே தென்படுகிறது. கையில் கிடைத்த ஆயுதங்களால் எடுக்க முயல்வது, முடியவில்லை என்றால் வெறுமனே கட்டுப்போட்டுக் கொண்டு சுற்றுவது வழக்கமாக இருக்கிறது. இதனால் அத்தகைய பொருட்கள் காருக்குள்ளேயே தங்கி அது சீழ் பிடிக்கவோ அல்லது சிறு கட்டியாக உருமாறி பின்நாட்களில் தொல்லை கொடுப்பதோ அதிகம். இப்படி முள் குத்திய காயங்கள் மூலம் டெட்டனஸ் போன்ற உயிர்கொல்லிக் கிருமிகளும் தாக்கி விடுவதும் உண்டு.

கைக்குழந்தைகள், நடைபயிலும் குழந்தைகள் இருக்கும் வீட்டில் அனைவர் கவனமும் அத்தகைய குழந்தை மேலேயே இருக்க வேண்டும். முதலுதவி தவிர வேறு சுயமருத்துவம் கூடவே கூடாது. பள்ளிப் பாடங்களிலும் பதினெட்டு வயது நிரம்பிய ஒவ்வொருவருக்கும் பாதுகாப்பு முறைமைகள் மற்றும் முதலுதவிகள் குறித்த விழிப்புணர்வு வகுப்புகளை எடுத்து முதலுதவி குறித்த புரிதலை
ஏற்படுத்துவது மிக அவசியம்.
 

Author: SudhaSri
Article Title: கண்ணில் விழுந்த தூசும்! வாயில் போட்ட காசும்!
Source URL: Nectar Novels-https://nectarnovels.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top Bottom